கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி ஞாயிற்றுக்கிழமை விரட்டியடித்தனர். 10 க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தி, வலைகளை அறுத்தெறிந்ததால் மீன்பிடிக்க முடியாமல் மீனவர்கள் கரைக்குத் திரும்பினர்.
வங்கக் கடலில் உருவான கஜா' புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த 5 நாள்களாக மீன்பிடிக்க செல்ல மீன் வளத் துறையினர் தடை விதித்தனர்.
இந்நிலையில், சனிக்கிழமை தடை நீக்கப்பட்டதை அடுத்து ராமேசுவரம், மண்டபத்தில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதில் 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தி கடலில் வீசி சென்றனர். இதனால் மீன் பிடிக்க முடியாமல் பல ஆயிரம் ரூபாய் இழப்புடன் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை கரைக்குத் திரும்பினர்.
இதுகுறித்து மீனவர் சங்க நிர்வாகிகள் கூறியது : 5 நாள்களுக்கு பின் படகு ஒன்றுக்கு ரூ. 35 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை செலவு செய்து மீன்பிடிக்க சென்ற எங்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி, மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இச்சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே ராமேசுவரம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாக் நீரினை பகுதியில் அச்சமின்றி மீன்பிடிக்க பாதுகாப்பான நிலையை உருவாக்க வேண்டும் என்றனர்.