கஜா புயல் நிவாரணத்துக்கு தமிழக அரசு கேட்கும் நிதியை தர மத்திய அரசு தயாராக உள்ளது என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி. யுமான இல.கணேசன் தெரிவித்தார்.
தேவகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டுகுருக்கள் குருபூஜை விழாவில் கலந்து கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கஜா புயல் முன்னச்சரிக்கை நடவடிக்கை எடுத்த தமிழக அரசை பாராட்டுகிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரனப் பொருள்களை வழங்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். பொதுமக்களின் அவசரத் தேவைகளை உணர்ந்து தேவையான குடிநீர், உணவு, தங்குவதற்கான இடம், மின்சாரம், நோய் பரவாமல் தடுப்பதற்கான பணிகளை அரசு கவனம் செலுத்த வேண்டும். மக்கள் சற்று பொறுமை காக்க வேண்டும். எதிர்க்கட்சியினரே அரசை பாராட்டியிருக்கின்றன. புயல் பாதிப்புகளை மதிப்பிட்டு தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்கத் தயாராக உள்ளது என்றார்.
அப்போது நகரச் செயலாளர் முத்துராமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.