கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள அண்மை மாவட்டங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 110 அலுவலர்கள் அடங்கிய மருத்துவம் மற்றும் மீட்பு பணிக் குழுவினரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் சனிக்கிழமை வழியனுப்பி வைத்தார்.
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த கஜா புயல், கடந்த 15 ஆம் தேதி நள்ளிரவு தமிழகத்தில் கரையைக் கடந்தது. இதன் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு தலா 20 நவீன மர அறுவை இயந்திரங்களுடன் தலா 40 பணியாளர்கள் என இரண்டு குழுக்களாக மொத்தம் 80 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். இம்மீட்புக் குழுக்களில் தீயணைப்புத்துறை, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறைகளைச் சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளனர்.
அதேபோல திருவாரூர் மாவட்டத்துக்கு ராமநாதபுரம் சுகாதார கோட்டத்திலிருந்து 4 குழுக்களும், பரமக்குடி சுகாதார கோட்டத்திலிருந்து 2 குழுக்களும் என மொத்தம் 6 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிலும் தலா 2 மருத்துவ அலுவலர்கள், ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு சுகாதாரப் பணியாளர் என 5 நபர்கள் வீதம் மொத்தம் 30 பேர் உள்ளனர். இக்குழுவினர் அனைவரும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.
வழியனுப்பும் நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த.ஹெட்சி லீமா அமாலினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கண்ணபிரான், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்கள் (ராமநாதபுரம்) மரு.குமரகுருபரன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, மாவட்ட தீயணைப்பு சாமிராஜ் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.