ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டதையடுத்து, அவரது கணவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தேவிபட்டினம் அருகேயுள்ள பூந்தோட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியநாயகம் (50). இவரது மனைவி பொற்கொடி (31). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. திங்கள்கிழமை வீட்டில் பொற்கொடி எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். தகவலறிந்த தேவிபட்டினம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, பொற்கொடி சடலத்தைக் கைப்பற்றி ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பொற்கொடியை கொலை செய்த அவரது கணவரைக் கைது செய்யும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் எனக் கூறி, பொற்கொடி குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். அதையடுத்து, போலீஸார் அவர்களை சமரசம் செய்தனர்.
இதனிடையே, பொற்கொடி உடலில் காயங்கள் இருப்பதால், அவரை அவரது கணவர் அடித்துக் கொன்று எரித்திருக்கலாம் என, பொற்கொடியின் தந்தை முருகேசன் போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில், தேவிபட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து, பெரியநாயகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.