கமுதி அருகே மணல் திருட பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரத்தை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.
கமுதி அடுத்துள்ள அபிராமம் அருகே நெடுங்குளம், கிருதுமால் நதி, பரளையாற்று பகுதிகளில் பட்டா நிலங்களில் மணல் சட்டவிரோதமாக அள்ளபடுவது குறித்து, காவல் கண்காணிப்பாளர் தனிப்படை பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், அபிராமம் காவல் ஆய்வாளர் ஜான்சிராணி தலைமையில், தனிப்பிரிவு சார்பு-ஆய்வாளர் முனியசாமி உள்ளிட்டோர் அடங்கிய போலீஸார், பரளையாறு, கிருதுமால் நதி பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, நெடுங்குளம் பகுதியில் பட்டா நிலத்தில் சட்டவிரோதமாக மணல் திருடப் பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரத்தை 4 கி.மீ. தொலைவு விரட்டிப் பிடித்து பறிமுதல் செய்தனர். மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய டிப்பர் லாரியை தேடி வருகின்றனர். மேலும், மணல் திருடிய வாடிப்பட்டியைச் சேர்ந்தவரும், தற்போது கமுதி கண்ணார்பட்டியில் வசிப்பவருமான பாலமுருகனை அபிராமம் போலீஸார் கைது செய்தனர்.