திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் பகுதியில் கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. குறிப்பாக கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள், குழந்தைகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியது: இக்கோயில் முக்கிய ஸ்தலமாக இருப்பதால் சுற்று வட்டார கிராம மக்கள் தங்கள் இல்ல திருமண நிகழ்ச்சிகளை இங்குதான் நடத்துகின்றனர்.
கோயில், திருமண நிகழ்ச்சிகளுக்கு வருவோர், கழிப்பறை வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வளாகத்தில் கழிப்பறை வசதியை செய்து கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.