சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரின் பல பகுதிகளில், பழுதடைந்துள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்துள்ளன. ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி எதிரே உள்ள மின்கம்பம், கீழே விழும் நிலையில் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் செல்லும் பாதையில் அபாய நிலையில் உள்ள மின்கம்பத்தை மின்வாரியத்தினர் கண்டுகொள்ளவில்லை.
அதேபோல் மாதவன் நகர் வீதியில் உள்ள மின்கம்பமும் உடைந்துள்ளது. காளியம்மன் கோயில் பகுதியில் உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பங்களின் மேற்பகுதி கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்துள்ளன. காற்றின் வேகத்தில் மின்கம்பம் சாய்ந்தால் பெரும் ஆபத்து ஏற்படும்.
இதேபோல் தென்மாபட்டு, தம்பிபட்டி ஆகிய இடங்களிலும் மின்கம்பத்தை மாற்ற வேண்டியுள்ளது. எனவே, மின்வாரியத்தினர் சேதமடைந்துள்ள மினகம்பங்களை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் கம்பர் நகர் முதல் தெருவில் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின் கம்பத்தை வைக்க வேண்டும் என புதன்கிழமை அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இம்மின் கம்பத்தை உடனடியாக அகற்றவில்லையெனில் குழந்தைகள், பொதுமக்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தி விடும் என அவர்கள் அச்சம் தெரிவித்தனர். இது குறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் பயன் இல்லையாம். உடனடியாக புதிய மின்கம்பத்தை அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனர்.