பரமக்குடி வைகை ஆற்றுப் பகுதியில் அதிகளவில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்குச் பாசனநீர் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட பாசனநீர் பார்த்திபனூர் மதகு அணைக்கு கடந்த 16 ஆம் தேதி வந்தடைந்தது.
அங்கிருந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வினாடிக்கு 1500 கனஅடி அளவிலான தண்ணீரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் திறந்து விட்டார்.
இந்த நீர் செவ்வாய்க்கிழமை அதிகாலை பரமக்குடியை வந்தடைந்தது. இங்கிருந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு செல்ல வேண்டிய வைகை ஆற்றின் வழித்தடத்தில் ஆறு
முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் பாசனநீர் குறித்த நாள்களுக்குள் செல்வது கேள்விக்குறியாக உள்ளது.
வைகை ஆறு பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவிடப்படாததால் தற்போது வைகை அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட பாசனநீர் முறையான பயன்பாட்டிற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகளும், பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே வைகை ஆற்றில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் பாசனநீர் செல்லும் கால்வாய் பகுதிகளையும் முறையாக சீரமைக்க
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.