கடலாடி அருகே கீழச்செல்வனூரில் மத்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நேரு யுவ கேந்திரா சார்பில், வட்டார அளவில் இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடத்தப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம் சாத்தாங்குடி நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம், மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நேரு யுவகேந்திரா இணைந்து, இளைஞர்களுக்கு கபடி, வாலிபால் மற்றும் தனித்திறன் விளையாட்டுப் போட்டிகளை நடத்தின. விளையாட்டு போட்டிகளை, கடலாடி துணை வட்டாட்சியர் செந்தில்வேல் முருகன் தொடக்கி வைத்தார்.
இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரி நேரு யுவ கேந்திரா சங்கத்தின் இயக்குநர் சடாச்சரவேல் தலைமை வகித்தார். கடலாடி வட்டாரப் புள்ளியியல் ஆய்வாளர் முருகபூபதி, மேலக்கிடாரம் அக்னி சிறகுகள் இளைஞர் மன்றத் தலைவர் த. செந்தில்குமார், கீழச்செல்வனூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி துணை மேலாளர் சிமன்ஸ், கிராம நிர்வாக அலுவலர் மணிகன்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கீழச்செல்வனூரில் நடைபெற்ற கபடி போட்டியில்,
சாத்தாங்குடி நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம் முதலிடத்தையும், மேலக்கிடாரம் அக்னி சிறகுகள் இளைஞர் நற்பணி மன்றம் இரண்டாம் இடத்தையும் பெற்றன. வாலிபால் போட்டியில், கீழச்செல்வனூர் பைவ் ஸ்டார் வாலிபால் கிளப் முதலிடத்தையும், காவாகுளம் விவேகானந்தர் இளைஞர் மன்றத்தினர் இரண்டாம் பரிசையும் பெற்றனர்.
தனித்திறன் போட்டிகளான 100 மீ. ஒட்டப் பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கீழச்செல்வனூர் காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் சித்ரா தேவி பரிசுகளை வழங்கினார்.