ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செப்டம்பர் 24 ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டமும், செப்டம்பர் 26 ஆம் தேதி சமையல் எரிவாயு தொடர்பான குறைதீர் கூட்டமும் நடைபெறுகிறது. இது குறித்து ஆட்சியர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கு, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு குறைதீர் கூட்டம்
செப்டம்பர் 26 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சி. முத்துமாரி தலைமையில், சமையல் எரிவாயு தொடர்பான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் சமையல் எரிவாயு முகவர்கள் பலரும் பங்கேற்க இருப்பதால், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் பொதுமக்கள் நேரில் தெரிவித்து பயன் பெறலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.