ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே சொத்துத் தகராறில் முதியவரை தாக்கிய 4 பேர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். இதில் மூதாட்டி கைது செய்யப்பட்டார்.
பார்த்திபனூர் அருகே உள்ள சூடியூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கன் மகன் பாலு. இவருக்கும், இவரது உறவினர் சந்திரன் மகன் மோகன்தாஸுக்கும் பூர்வீக சொத்து சம்மந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறில் பாலுவை மோகன்தாஸ், அவரது சகோதரர்கள் சதுரகிரி, ராஜசேகர், தாயார் பாப்பா ஆகியோர் சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த அவர், பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பார்த்திபனூர் காவல் நிலையத்தில் பாலு அளித்த புகாரின் பேரில் மோகன்தாஸ், சதுரகிரி, ராஜசேகர், பாப்பா ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். இவர்களில் பாப்பாவை கைது செய்து, ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.