திருவாடானை அருகே உள்ள நம்புதாளையில் தொழுநோய், தொற்று நோய் குறித்த கள ஆய்வு மற்றும் விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது
மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் குமரகுருபரன் அறிவுறுத்தலின்படி, திருவாடானை வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி தலைமையில் மருத்துவர் கார்த்திகேயன் சுரேஷ் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் நம்புதாளை பகுதியில் தொழுநோய் ஆய்வு, விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர்.
நம்புதாளை பல்லாக்கு ஒளியுல்லா தெரு, பாவோடி உள்ளிட்ட பகுதிகளில் இக்குழுவினர் வீடு வீடாகச் சென்று காசநோய், தொழு நோய் மற்றும் புற்றுநோய் அறிகுறிகள் பொதுமக்களிடம் உள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும், பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில், மாவட்ட காசநோய் மைய அலுவலர் மகேந்திரன், ராகுல் உள்ளிட்டோர் சிகிச்சை முறைகள், அரசு சார்பில் வழங்கப்படும் சிகிச்சை உதவிகள் ஆகியன குறித்து எடுத்துரைத்தனர்.