பரமக்குடி அருகே உள்ள வேந்தோணி கிராமத்தில் அம்மன்கோவில் நகர் பகுதியில் கடந்த 4 மாதங்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, காவிரி கூட்டுக் குடிநீர் குழாயிலிருந்து அங்குள்ள நீர்தேக்கத் மேல்நிலைத் தொட்டியில் ஏற்றி குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இதில் சிலர் முறையான அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு முற்றிலும் குடிநீர் விநியோகம் செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எவ்விதநடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே மாவட்ட ஆட்சியர், அப்பகுதி மக்களுக்கு குடிநீர் முறையாக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.