அரசு வேலை வழங்கக் கோரி உயரம் குறைவான மாற்றுத் திறனாளிப் பெண் ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் கொ.வீரராகவராவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா மேலக்கிடாரம் கிராமத்தைச் சேர்ந்த தெட்சிணாமூர்த்தியின் மகள் தெ.நாகலெட்சுமி(25). உயரம் குறைவான மாற்றுத்திறனாளிப் பெண்ணான இவர், 10 ஆம் வகுப்பு படித்து விட்டு, ஓராண்டு செவிலியர் படிப்பும் முடித்திருப்பதாகவும், தனக்கு ஏதேனும் ஒரு அரசு வேலை பெற்றுத் தருமாறும் கோரி, ஆட்சியரிடம் சான்றிதழ்களை காண்பித்து கோரிக்கை மனு அளித்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு கிராம உதவியாளர் பணிக்கு நேர்முகத்தேர்வு வந்தது. ஆனால் வேலை கிடைக்கவில்லை. தனக்கு 60 சதவீத ஊனம் இருப்பதால் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின் மூலம் ஏதேனும் ஒரு அரசு வேலை வழங்குமாறு ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில் நாகலெட்சுமி குறிப்பிட்டிருந்தார்.