ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே மணல் திருட்டு குறித்து தகவல் அளித்த கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரை தாக்கிய 4 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனர்.
சத்திரக்குடி அருகே முதலூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தவலியான் மகன் கண்ணன்(42).
இவர் அதே ஊரில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்கிராமத்தில் நடைபெற்ற மணல் திருட்டு குறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
இதில் அவர் மீது சிலருக்கு முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று கண்ணனை அதே கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி மகன் பாலாஜி, கிருஷ்ணசாமி மகன் சாத்தக்கண்ணன், ராமசாமி மகன் குள்ளமணி என்ற மகேஷ், வீரபாண்டி மகன் மகேஷ் ஆகிய 4 பேரும் உருட்டுக் கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து சத்திரக்குடி காவல் நிலையத்தில் கண்ணன் அளித்த புகாரின் பேரில் 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.