பரமக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு லாரி மோதியதில், சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பரமக்குடி மணி நகர் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் மகன் கெவின் (15). இவர், தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பக்கத்து தெருவில் உள்ள டியூசன் ஆசிரியர் வீட்டுக்குச் சென்று படித்துவிட்டு, மீண்டும் வீட்டுக்கு சைக்கிளில் திரும்பியுள்ளார். சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக விறகு ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கிச் சென்ற லாரி மோதியது. இதில், அம்மாணவரின் தலையில் பலத்த காயமேற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற பரமக்குடி போலீஸார், மாணவரின் சடலத்தை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது தந்தை செல்வம் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான சாயல்குடி அருகே உள்ள சவேரியார்பட்டணத்தைச் சேர்ந்த இன்னாசி என்பவரைக் கைது செய்தனர்.