ராமநாதபுரத்தில் படப்பிடிப்பு நடத்த உள்ளதால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமை இயக்குநர் பாலா பார்வையிட்டுச் சென்றார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம்போல் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில், பொதுமக்களிடமிருந்து அதிகாரிகள் மனுக்கள் பெற்றனர்.
அதில், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் கோரி ஏராளமானோர் மனு அளித்தனர்.
அப்போது, திரைப்பட இயக்குநர் பாலா தனது உதவியாளர்கள் மற்றும் நண்பர்களுடன் முகாம் நடந்த இடத்துக்கு வந்தார். அங்கு, பொதுமக்களிடமிருந்து அதிகாரிகள் மனுக்களைப் பெறும் முறை, மக்கள் மனுக்களை அளிக்கும்போது நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றை கவனித்த இயக்குநர் பாலா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ளது. படப்பிடிப்புக்கான இடத்தை தேர்வு செய்து வருகிறேன். எனவே, மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கும் விதம் குறித்தும் பார்த்தேன்.
ராமநாதபுரத்தில் 3 மாதம் நடைபெறும் இப்படத்துக்கான பெயர் இன்னும் சூட்டவில்லை என்றார்.
பின்னர் அவர், ராமநாதபுரம் அரண்மனை உள்ளிட்ட இடங்களையும் பார்வையிட்டுச் சென்றார்.