ஆர்.எஸ். மங்கலம் வட்டாரத்தில் மிளகாய் வரத்து அதிகரித்துள்ள நிலையில் விலை குறைவாக இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருவாடானை அருகே ஆர்எஸ் மங்கலம், செங்கொடி, வண்டல், வரவணி, பாரனூர், ஆவரேந்தல், மங்கலம், தும்ப டா கோட்டை, சோழந்தூர் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் மிளகாய் விவசாயம் செய்யப்படுகிறது. இப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் நெல் விவசாயத்தில் கடும் வறட்சியை சந்தித்த விவசாயிகள் பெரும்பாலோர் மிளகாய் விவசாயத்திற்கு மாறினர்கள். தற்போது மிளகாய் விளைந்து அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மிளகாய்க்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு மிளகாய் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 23 ஆயிரத்திலிருந்து ரூ.17 ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது முதல் ரகம் ரூ.9ஆயிரம், இரண்டாம் ரகம் ரூ.7ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இது குறித்து தும்படாகோட்டையைச் சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் கூறுகையில், இந்த ஆண்டு மிளகாய் விளைச்சல் அதிகரித்துள்ளது.
இதனால் விலை இறக்கம் ஏற்பட்டு பெரும் நஷ்டத்தை சந்திக்க கூடிய சூழ்நிலை உள்ளது என்று தெரிவித்தார்.
கமுதி: கமுதி பகுதியில் குண்டு மிளகாய் வத்தல் விலை வரலாறு காணாத அளவுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
8 ஆண்டுகளாக பருவமழை பொய்ப்பால், நெல், பருத்தி, மிளகாய் விவசாயம் பொய்த்துள்ளது. இதனால் ஆழ்துளை கிணற்று நீரை நம்பி இப்பகுதியில் மிளகாய் விவசாயம் செய்யபட்டு வருகிறது. குண்டு மிளகாய் வத்தல்கள், சம்பா வத்தல்களை காட்டிலும் கூடுதலாக விலை போகும். ஆனால் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு, குறைந்தளவு மகசூல் கிடைத்துள்ளது. இந்நிலையில் குண்டு மிளகாய் வத்தல்கள் கிலோ 75 ரூபாய்க்கும், சம்பா வத்தல்கள் 85 ரூபாய்க்கும் விலை போகிறது. இதனால் குண்டு மிளகாய் விவசாயம் செய்துள்ள விவசாயிகள், உரிய விலை கிடைக்காமல் கவலையில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்தாண்டு மிளகாய் விவசாயிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் காப்பீட்டு தொகையை காட்டிலும் கூடுதலாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.