ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் பகுதியில் உள்ள ரெணபலி முருகன் கோயில் மாசித் திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் சஸ்தான தேவஸ்தானத்துக்குச் சொந்தமான சிவசுப்பிரமணிய சுவாமி என்ற ரெணபலி முருகன் கோயில் மாசித் திருவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. தினமும் சுவாமி அன்ன, சேஷ, பூத, கைலாச, மயில் வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
முக்கிய நிகழ்ச்சிகளாக சண்முகர் உற்சவம், இந்திர விமானம் பட்டயம் உள்ளிட்டவை நடந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி, அம்மனுடன் காலை 8 மணிக்கு எழுந்தருளினார். சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னர் தேர் வடத்தை பக்தர்களும், முக்கியப் பிரமுகர்களும் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளில் வலம் வந்த தேர் பகல் 12 மணிக்கு நிலையை அடைந்தது. தேர் வந்த சாலையில் இருபுறமும் பெருவயல் உள்ளிட்ட அனைத்துப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குழுமியிருந்து சாமி தரிசனம் செய்தனர். தேரோட்ட ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் மற்றும் நிர்வாகச் செயலர் கே.பழனிவேல்பாண்டியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
மாசித் திருவிழா: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆழப்புளி காளியம்மன் கோயில், சிங்காரவேலர் கோயில் ஆகியவற்றில் மாசித் திருவிழா நடைபெற்றது. இளமனூர் பூமடந்தை கோயிலில் பூங்குளி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டத்தில் பல்வேறு சிற்றூர்களிலும் மாசிக் களரி விழா தொடங்கி நடந்துவருகின்றன.