ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரியில் சட்ட உதவி மையம் புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு சட்டப் பயிற்சிகள் அண்மையில் வழங்கப்பட்டன. பயிற்சி பெற்ற மாணவர்கள் மூலம் பொதுமக்களுக்கு ஆணைக்குழு வழக்குரைஞர்களுடன் சேர்ந்து உதவி செய்யும் வகையில் சட்டக் கல்லூரி வளாகத்தில் சட்ட உதவி மையம் தொடக்கிவைக்கப்பட்டது.
இந்த மையத்தை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான அ.கயல்விழி திறந்து வைத்தார். பின்னர் மையத்தில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான பி.ஆர்.ராமகிருஷ்ணன், சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலர் நீதிபதி வி.ராமலிங்கம், ராமநாதபுரம் மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஏ.ரவிச்சந்திரராமவன்னி, செயலர் ஏ.நம்புநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிறைவில் எஸ்.ஜெய்னிபிரான்சினா நன்றி கூறினார்.