திருவாடானை அருகே கீழக்குடி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
திருவாடானை தாலுகா குளத்தூர் ஊராட்சிக்குள்பட்ட கீழ்க்குடி கிராமத்தில் வசிக்கும் மக்கள் விவசாயம், விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். வறுமைக் கோட்டிற்கும் கீழ் உள்ளோர் பட்டியலில் தங்களது பெயர்கள் இல்லை என்று கூறியும், தண்ணீர், சாலை, மின் விளக்கு, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
இது குறித்து கீழக்குடி கிராமத்தினர் கூறியது: எங்களது கிராமத்தில் வசதி படைத்தவர்கள் பெயர்கள் அனைத்தும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் உள்ளது. ஏழை, எளியவர்களின் பெயர்கள் இல்லை. கிராமத்தில் குடிநீர், தெருவிளக்கு, குப்பைத் தொட்டிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. குடிநீர் 15 நாளுக்கு ஒருமுறைதான் வருகிறது. மேலும் தெருக்களில் குப்பை தொட்டிகள் இல்லை, இதனால் தேங்கும் குப்பைகளை ஊழியர்கள் யாரும் அகற்றுவதில்லை. எனவே, எங்களது கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனில் வரும் மக்களவை தேர்தலை புறக்கணிப்போம் என்றனர்.
தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து முற்றுகையைக் கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.