இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 2 மாணவர்கள் விடுவிக்க கோரிக்கை

ராமேசுவரத்தில் இருந்து பள்ளி, கல்லூரி படிப்புக்கு பணம் சேர்க்க மீன்பிடிக்க சென்றபோது கைது செய்யப்பட்ட

ராமேசுவரத்தில் இருந்து பள்ளி, கல்லூரி படிப்புக்கு பணம் சேர்க்க மீன்பிடிக்க சென்றபோது கைது செய்யப்பட்ட 2 மாணவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து மீட்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தனர். 
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் பெரும்பாலனோர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதில் சிலர் தங்களது குழந்தைகளை உயர் கல்வி படிக்க வைத்து மாற்று வேலைக்கு அனுப்பி வைத்து விடலாம் என்ற எண்ணத்தில் கடன் வாங்கி கல்லூரி வரை படிக்க வைக்கின்றனர். 
மீன்பிடி தொழிலில் போதிய வருவாய் இன்றி போவதால் விடுமுறை நாள்களில் மாணவர்கள் மீனவர்களாக மாறி மீன்பிடிக்க செல்கின்றனர். 
இந்நிலையில், சனிக்கிழமை மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 19 மீனவர்களில் துரைப்பாண்டி கீழக்கரை தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவர் ஆவார். இதே போன்று சாம்டேனியல் என்ற மாணவர் ப்ளஸ் 1 படித்து வருகிறார்.
தொடர் விடுமுறை என்பதால் குடும்ப சூழ்நிலை காரணமாக மீன்பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். குடும்ப சிரமத்திற்கு இடையே கல்லூரியில் படித்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதால் அவரது கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், மத்திய, மாநில அரசுகள் விரைந்து இந்த இரு மாணவர்களையும் மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 
இந்நிலையில், இலங்கையில் உயிரிழந்த மீனவர் உடலை கொண்டு வர வேண்டும் என குடும்பத்தினர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com