ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்ட 1,980 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் கிழக்கு கடற்கரை சாலையில் காவல் சார்பு ஆய்வாளர் அனிதா தலைமையிலான போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற மினி வேனை தடுத்து நிறுத்தி போலீஸார் சோதனையிட்டனர்.
இதில், அந்த வேனில் 1,980 கிலோ மதிப்பிலான 280 பீடி சுருட்டுகள்,புகையிலைப் பொருள்கள் இருந்தன. இதுகுறித்து வேனில் வந்தவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
மேலும், எந்தவித ஆவணங்களும் இல்லாமல் அவற்றை கொண்டு சென்றதும் தெரியவந்தது.
அதையடுத்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸார் அவற்றை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், இதுதொடர்பாக வேனில் வந்த பேராவூரணியைச் சேர்ந்த ராமமூர்த்தி, ராஜேஷ், கணேசன் ஆகியோரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.