நூறு நாள் திட்ட பணி வாய்ப்புக் கோரி கிராம பெண்கள் ஆட்சியரிடம் மனு

நூறு நாள் வேலைத் திட்ட பணி வாய்ப்பு வழங்கக்கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கிராமப்புற பெண்கள் மனு கொடுத்தனர்.

நூறு நாள் வேலைத் திட்ட பணி வாய்ப்பு வழங்கக்கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கிராமப்புற பெண்கள் மனு கொடுத்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு மனு அளித்தனர். 
இதில், ராமநாதபுரம் ஒன்றியம் வெண்ணாத்தூர் பகுதி ஆண்டிச்சியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பவானி தலைமையில் மனு கொடுத்தனர். அவர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் 50 குடும்பங்கள் உள்ளன. எங்களிடம் நூறு நாள் வேலை உறுதித் திட்டத்திற்கான அடையாள அட்டைகள் உள்ளன. 
ஆனால், இதுவரை அப்பணியில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ஆண்டுதோறும் அடையாள அட்டை புதுப்பிக்கப்பட்டும் வருகிறது. மேலும், கிராமத்தில் சாலை போன்றஅடிப்படை வசதிகள் ஏதுமில்லை என்றனர்.
தென்னை விவசாயிகள் மனு:  தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் ஆர்.மணிமாதவன் தலைமையில் ஏராளமானோர் மனு கொடுத்தனர். அவர்கள் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சி நிலவுகிறது. இதனால், தென்னை விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே தென்னை விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். இதுதொடர்பாக ஏற்கெனவே ஆட்சியர், அமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி விரைவில் நிவாரணம் வழங்கவேண்டும் என்றனர். 
குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி: ஆட்சியர் அலுவலகத்துக்கு கும்பரம் எனும் ஊரைச் சேர்ந்த தமிழரசன் மனைவி விஜயா (33) மனு கொடுக்க வந்தார். மகன், மகளுடன் வந்த அவர் திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றியபடி குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த கேணிக்கரை போலீஸார் விஜயாவிடமிருந்து மண்ணெண்ணெய் கேனைப் பறிமுதல் செய்து அழைத்துச்சென்றனர். 
தன்னையும் குழந்தைகளையும் கைவிட்டு கணவர் வேறு பெண்ணுடன் சேர்ந்து வாழ்வதாகவும், அவரை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரியும் மனு கொடுக்க வந்ததாக போலீஸாரிடம் விஜயா தெரிவித்தார். அவருக்கு அறிவுரை கூறி போலீஸார் அனுப்பிவைத்தனர். 
கருகிய பயிருடன் வந்த விவசாயிகள்: கடலாடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கருகிய பயிர்களுடன் வந்திருந்தனர். அவர்கள் கூறுகையில், தங்களது கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வறட்சியால் விவசாயம் பொய்த்துப் போனதாகவும், ஆகவே காப்பீடு திட்டத்தில் தங்களது கிராம விவசாயிகளையும் சேர்த்து நிவாரணம் வழங்கவேண்டும் என்றனர். முகாமில் நலத்திட்டங்களையும் ஆட்சியர் பயனாளிகளுக்கு வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com