கமுதி அருகே அரசு பள்ளி எதிரே பல ஆண்டுகளாக சேதமடைந்து, எலும்பு கூடாய் காட்சியளிக்கும் மின்கம்பத்தால், மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கமுதி அருகே இடையங்குளம் அரசு தொடக்கபள்ளியில் 36 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியை சுற்றிலும் சுற்றுச் சுவர், குடிநீர் வசதிகள் இல்லாதபோதும், மாணவர்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றனர். பள்ளி நுழைவு வாயிலில் பல ஆண்டுகளாக சேதமடைந்து, எலும்பு கூடாய் காட்சியளிக்கும் மின் கம்பத்தால், மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர். வகுப்பு நேரங்களில் சிறு காற்றடித்தாலே அசைந்தாடும் மின்கம்பத்தால், அவ்வழியாக நடந்து செல்லவே அச்சமடைந்துள்ளனர்.
மேலும் பள்ளியை சுற்றி சுற்று சுவர் இல்லாததால் ஒருசிலர் பள்ளி நேரத்தில் பள்ளி வளாகத்தை மிளகாய் வத்தல் உலர் களங்களாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பள்ளி வளாகத்தை ஆக்கிரமித்து உலர் களங்களாக பயன்படுத்தி வரும் தனியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சேதமடைந்துள்ள மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.