ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே செங்கல் லாரியும், சுற்றுலா சென்ற ஆம்னி வேனும் செவ்வாய்க்கிழமை நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், அண்ணன், தம்பி இருவர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், தென்காசி இலஞ்சியைச் சேர்ந்தவர் இசக்கி ராஜா. இவரது இரு மகன்கள் குட்டி (26) மகாராஜா (25) மற்றும் சுரேஷ் (23), ஆய்க்குடி சுரேஷ் (20), அனந்தபுரம் ஆறுமுகம் (30), ராஜூ (23) உள்பட 7 பேர், ராமேசுவரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய திங்கள்கிழமை அதிகாலை ஆம்னி வேனில் வந்தனர்.
பின்னர், அங்கிருந்து செவ்வாய்க்கிழமை காலையில் ஊர் திரும்பினர். மண்டபம் அருகே சாத்தக்கோன்வலசை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, தினைக்குளத்திலிருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு ராமேசுவரம் நோக்கி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், இசக்கி ராஜா மகன்களான குட்டி, மகாராஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், இவர்களுடன் பயணித்த 5 பேர் மற்றும் லாரியில் வந்த தொழிலாளர்களான பெருமாள் கோவில் கோவிந்தராஜ் (27), ஆனந்தராஜ் (31) ஆகியோர் காயமடைந்தனர். இவர்களில் பலத்த காயமடைந்த இருவர், மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து உச்சிப்புளி காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமார் சாமுவேல், சார்பு-ஆய்வாளர் அன்சாரி உசேன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரான புத்தேந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாதவன் என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.