ராமேசுவரம் மீனவர்கள் 8 பேருக்கு, ஏப்ரல் 2 ஆம் தேதி வரை 7 ஆவது முறையாக காவலை நீட்டித்து, இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த ஜனவரி 13 ஆம் தேதி கடலுக்குச் சென்ற மீனவர்களில் 8 பேரை, இலங்கைக் கடற்படையினர் விசைப்படகுடன் சிறைப்பிடித்துச் சென்றனர். இதில், 2 கல்லூரி மாணவர்களும் அடங்குவர்.
இதனிடையே, இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், தொடர்ந்து மீனவர்களின் காவலை நீட்டித்து, இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டு வந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 7 ஆவது முறையாக ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்ட அந்நாட்டு நீதிபதி ஜூட்சன், இவர்களின் காவலை ஏப்ரல் 2 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதனையடுத்து, மீனவர்கள் 8 பேரும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.