திருவாடானை அருகே புதன்கிழமை துப்பாக்கி குண்டு காயத்துடன் மயில் மீட்கப்பட்டது.
திருவாடானை அருகே தற்போது அதிக அளவில் மயில்கள் உள்ளன. இதனை அறிந்த சமூகவிரோதிகள் கும்பல் கடந்த சில நாள்களாக மயில்களை வேட்டையாடி வருகின்றனர். இந்நிலையில் புதன்கிழமை மாலை திருவிடைமருதூர் கிராமத்தில் கண்மாய் பகுதியில் ஒரு ஆண் மயில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் கிடந்துள்ளது. இதனை கண்ட ஊர் மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறை தோட்ட காவலர் சின்னப்பன் மயிலை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அப்போது மயில் உயிரிழந்தது. பின்னர் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டு புதைக்கப்பட்டது. இப்பகுதியில் மயில்கள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருவதால் வனத் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.