ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் பங்குனி பிரமோத்ஸவ விழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் 108 வைணவ திருத்தலங்களில் 44 ஆவது தலம் என அழைக்கப்படுகிறது. இங்கு பங்குனிப் பெருவிழா கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. வியாழக்கிழமை ஒன்பதாம் திருநாள் நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணியளவில் பெருமாள் பத்மாஸனித்தாயாருடன் தேரில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தார்.
திருப்புல்லாணி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
கமுதியில்: கமுதியில் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவையொட்டி, புதன்கிழமை பக்தர்கள் சேத்தாண்டி வேடமணிந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழா நிகழ்ச்சியில், பக்தர்கள் கமுதி செட்டி ஊருணியில் உடல் முழுவதும் சேறு பூசி, சேத்தாண்டி வேடமணிந்து, வேப்பிலை சகிதமாக, கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அக்கினிசட்டி எடுக்கும் பக்தர்கள் பூக்குழி இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைக்குடியில்: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி -பங்குனித் திருவிழாவில் புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடம், காவடி, அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருப்பத்தூரில்: திருப்பத்தூர் அருகே பட்டமங்கலத்தில் மதியாதகண்ட விநாயகர், அழகு செளந்தரி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான சமஸ்தான அறங்காவலர் ராணி மதுராந்தகநாச்சியார், மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் தண்ணாயிரம் ஆகியோர் செய்திருந்தனர்.
பரமக்குடியில்: பரமக்குடி முத்தாலப் பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வராள் மற்றும் ஸ்ரீமுத்தாலம்மன் கோவில் தேவஸ்தானம் பரம்பரை நிர்வாகிகள் பா.ஜெயராமன், வா.ரவீந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.