ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தயார் நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செயல்பாடு சரிபார்க்கப்பட்டு ஒரே இடத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளும், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளும் அடங்கியுள்ளன. தொகுதியில் மொத்தமுள்ள 1916 வாக்குச்சாவடிகளில் 4,886-க்கும் அதிகமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (பதிவு, கட்டுப்பாடு மற்றும் விவிபேட்) பயன்படுத்தப்படவுள்ளன.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறையில் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டன. பின்னர் அவை வேளாண்மை ஒழுங்குமுறைக் கூடத்தில் இருப்பு வைக்கப்பட்டன.
இந்த நிலையில் தொகுதிக்கு கூடுதலாக வந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடு தொடர்பான சோதனையானது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்றது.
இச்சோதனை முடிந்த நிலையில், அந்த இயந்திரங்கள் லாரிகளில் சனிக்கிழமை காலையில் ஏற்றப்பட்டு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. முன்னதாக அந்த இயந்திரங்கள் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு சீலிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தின் கீழ்தளத்திலிருந்து 297 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 288 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 516 விவிபேட் இயந்திரங்கள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு விரைவில் தாலுகா பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.