முதுகுளத்தூர் அருகே ரேசன் கடையில் தரமற்ற அரிசி விநியோகம் செய்ததால் வட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
முதுகுளத்தூர் அருகே விளங்குளத்தூர் ஊராட்சியில் உள்ள பருத்திகுளம் கிராமத்தில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள கிராம மக்களுக்கு விளங்குளத்தூர் ரேசன் கடையில் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடையில் தரமற்ற அரிசி விநியோகம் செய்ததால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதனால் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை பருத்திகுளம் கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் வட்ட வழங்கல் அலுவலர் முருகேசன், காவல்துறை சார்பு ஆய்வாளர் கலையரசன் ஆகியோர் சமரசப் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் விளங்குளத்தூர் ரேஷன் கடையில் ஆய்வு செய்து தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கிராம மக்களிடம் கூறினர்.