காரைக்குடியில் பெண்ணுக்கு திருமண ஆசை காட்டி மோசடி செய்த இளைஞர், வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய இருந்த நிலையில் அவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் காளிமுத்து (31).இவர்,காரைக்குடி வருமான வரித்துறை அலுவலகம் அருகே மென்பொருள் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் புதுவயல் கிராமத்தைச் சேர்ந்த ஜோஸ்பின்(27) என்பவர் மேலாண்மை இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். காளிமுத்து, ஜோஸ்பினை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அவரிடமிருந்து ரூ.5 லட்சத்து 6 ஆயிரம் ரொக்க பணமும்,11 பவுன் தங்க நகையும் பெற்றாராம்.
இந்நிலையில், காளிமுத்து அதே நிறுவனத்தில் பணிபுரியும் வேறொரு பெண்ணை புதன்கிழமை (நவ.14) திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த ஜோஸ்பின் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு போலீஸார் காளிமுத்து மீது வழக்குப் பதிந்து, அவரை திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.