வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாகக்கூறி காரைக்குடி அருகே 5 பேரிடம் ரூ.5.75லட்சம் மோசடி செய்த முகவர் மீது சிவகங்கை போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கோட்டையிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் (53).இவர், காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் கிராமத்தைச் சேர்ந்த அழகப்பன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், மணிகண்டன் , பாலசுப்பரமணியன், சரவணன் ஆகிய 5 பேரையும் டென்மார்க் நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ.5 லட்சத்து 75ஆயிரம் வாங்கினாராம். ஆனால் 5 பேரையும் டென்மார்க் நாட்டுக்கு அனுப்பாததோடு பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லையாம்.
இதுகுறித்து அழகப்பன் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த வழக்கில் பாண்டீஸ்வரன் ஏற்கெனவே சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.