ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு திறக்கப்பட்டு வைகையாற்றில் வந்து கொண்டிருக்கும் தண்ணீர் கடந்த சனிக்கிழமை பிற்பகல் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதி கால்வாய்களிலும் திறக்கப்பட்டது. இந்த கால்வாய் முகப்புகள் 19 ஆம் தேதி மூடப்படும் என பொதுப்பணித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு வைகையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த மழையாலும் மதுரை, தேனி மாவட்டங்களில் கொட்டிய மழையாலும் வைகையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் உபரிதண்ணீர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மானாமதுரை, திருப்புவனம் பகுதி கால்வாய்களிலும் திறக்கப்பட்டு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. உபரித் தண்ணீர் என்பதால் சிவகங்கை மாவட்டத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மானாமதுரை, திருப்புவனம் பகுதி கால்வாய் முகப்புகள் 19ஆம் தேதி மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் தேதி முடிந்ததும் சிவகங்கை மாவட்ட பாசனத்துக்கு வைகையில் தண்ணீர் திறக்கப்படும். அப்போது மேற்கண்ட பகுதி கால்வாய்கள் மீண்டும் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) அதிகாரிகள் தெரிவித்தனர்.