சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே மதுபாட்டில்களை கடத்திய இளைஞரை, போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து அவரிடமிருந்து 100 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் அருகே உள்ள கீழச்சிவல்பட்டி காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் வேலுச்சாமி தலைமையிலான போலீஸார், ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பேருந்து நிலையப் பகுதியில் சந்தேகம் அளிக்கும் வகையில் மூட்டையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது, அந்த இளைஞர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், மூட்டையைப் பிரித்து சோதனையிட்டதில், 100 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்ததை அடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா கண்ணனூரைச் சேர்ந்த நடராஜன் (27) என்பதும், அவர் விராமதியிலுள்ள அரசு மதுபானக் கடையில் மதுபாட்டில்களை விலைக்கு வாங்கி, கிராமப்புறங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றதும் தெரியவந்தது.