மானாமதுரையில் தியாக விநோதப் பெருமாள், வியாழக்கிழமை இரவு அனுமந்த வாகனத்தில் உலா வந்து, பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
மானாமதுரை புரட்சியார்பேட்டை பகுதியில் உள்ள இக்கோயிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோயிலில் கொலு அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது. தினமும் இரவு மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அலங்காரத்துடன் பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது.
பின்னர், உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிகிறார். அதன்படி, 9 ஆம் நாளான வியாழக்கிழமை இரவு, சுவாமி அனுமந்த வாகனத்தில் புறப்பாடாகி சப்பரத்தேரில் வீதி உலா வந்தார்.
பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு பெருமாளை வரவேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். வாகனத்தின் முன்பு சிறுமிகள் கோலாட்டம் ஆடிச் சென்றனர்.