தொடர் மழை காரணமாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் விவசாயப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தில் நெல், மிளகாய், பருத்தி, கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்டவற்றை விதைத்தல், நடவு செய்யும் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். போதிய அளவு மழை பெய்துள்ளதால், இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தொடக்க வேளாண்மை அலுவலகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், அரசு அங்கீகாரம் பெற்ற விதைகள் மற்றும் உரங்கள் விற்பனை நிலையங்களில் அந்தந்த பகுதி விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை போதிய அளவு இருப்பு வைப்பதோடு மட்டுமின்றி, மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானை பகுதிகளில்: திருவாடானை தாலுகாவில் 40 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்த நிலையில், நடப்பு சம்பா பருவத்தில், விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளனர். தாமதமாக பருவமழை தொடங்கினாலும் பயிர்கள் நல்லமுறையில் முளைத்துள்ளன. பயிர்களைவிட களைகள் அதிகம் காணப்படுவதால், கலைக்கொல்லி மருந்துகளை தெளிக்கும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.