திருப்புவனம் தாலுகா மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள்,

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மானாமதுரை வட்டத்தைப் பிரித்து திருப்புவனம் தனி வட்டமாக கடந்த 2012 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.அதையடுத்து, திருப்புவனத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த மருத்துவமனைக்கு திருப்புவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களிலிருந்து தினசரி சுமார் 400-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு போதிய கட்டடம் மற்றும் அடிப்படை வசதிகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், ஏறக்குறைய 9 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் தலைமை மருத்துவர் உள்பட 6 மருத்துவர்கள் தான் தற்போது பணியில் உள்ளனர். இதேபோன்று செவிலியர்கள், மருந்தாளுநர்கள் பணிகளிலும் பற்றாக்குறையே நிலவுகிறது. தற்போது  மழைக்காலம் என்பதால் இப்பகுதிகளில், மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இல்லாததால் வெள்ளிக்கிழமை நோயாளிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
 எனவே,  மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து திருப்புவனம் தாலுகா மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்களை போதிய அளவில் நியமிக்க வேண்டும் என நோயாளிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com