திருப்பாச்சேத்தியிலிருந்து சல்பனோடை வரை சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்கும் பணி மாத கணக்கில் மந்தமாக நடைபெறுவதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே டி.வேலாங்குளம், பிச்சைப்பிள்ளையேந்தல், தாலிக்குளம், பத்துப்பட்டி, குருந்தங்குளம், மாரநாடு, ஆனைக்குளம், சல்பனோடை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்களின் போக்குவரத்து வசதிக்காக, மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருப்பாச்சேத்தியிலிருந்து சல்பனோடை கிராமம் வரை சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு தார் சாலை அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்து குண்டும், குழியுமாக இருந்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருவதாகப் புகார்கள் எழுந்தன. மேலும், இச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், கடந்த ஜூலை மாதம் சீரமைக்கும் பணி தொடங்கியது.ஆனால், பணிகள் தொடங்கி 2 மாதம் நிறைவடைந்த நிலையில், ஆரம்பக் கட்டப் பணிகளுடன் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால், போக்குவரத்து தடைபட்டு அந்த பகுதியிலிருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.