சிவகங்கை மாவட்டம் ஆலங்குளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு கூட்டுப் பண்ணையம் குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
வேளாண் விரிவாக்க சீரமைப்புத் திட்டம்(அட்மா) 2018-19 இன் கீழ் நடைபெற்ற முகாமுக்கு வேளாண்மை துறையின் சிவகங்கை வட்டார உதவி இயக்குநர் த.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். வேளாண் துறையின் துணை இயக்குநர் மு.இளங்கோவன் வேளாண் பணிகளில் இயந்திரங்களின் பயன்பாடு குறித்தும், கூட்டாக இடுபொருள்கள் வாங்குதலால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.
வேளாண் அலுவலர் எம்.காளிமுத்து(வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை) பால் மற்றும் சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் பற்றிய தொழில்நுட்ப கருத்துகளை தெரிவித்தார்.
முகாமில் ஆலங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.