வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கல்லலைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (60). இவர் தன்னுடைய மகன் நாகராஜன் மற்றும் உறவினர் ரகுவரன் ஆகிய இருவரையும் ஜெர்மனி நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதற்காக தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சத்தை கடந்த 2016 டிசம்பரில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கோட்டையிருப்பைச் சேர்ந்த பாண்டிஸ்வரன் (53) என்பவரிடம் கொடுத்தாராம். இருவரும் ஜெர்மனி செல்வதற்காக பாண்டீஸ்வரன் விசா வழங்கினாராம். இந்நிலையில், ஹைதராபாத் விமான நிலையத்திற்கு இருவரும் சென்றபோது போலீஸார் விசாரணையில் விசா போலி என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கொடுத்த பணத்தை பன்னீர் செல்வம் திரும்ப கேட்டபோது பாண்டீஸ்வரன் மிரட்டினாராம். இதுகுறித்து பன்னீர் செல்வம் சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரனிடம் கொடுத்த புகார் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சாது ரமேஷ், சார்பு -ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் வழக்குப் பதிந்து, பாண்டிஸ்வரனை புதன்கிழமை கைது செய்தனர்.