தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மழைநீர் வரத்துக் கால்வாய் மற்றும் சிறுவர் பூங்கா, மூலிகை பூங்கா ஆகிய பகுதிகளில் உள்ள மழைநீர் வரத்துக் கால்வாய்கள் தூர்வாரும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இந்த பணியை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். இதில் இலுப்பகுடியில் உள்ள இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் வீரர்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நான்கு குழுக்களாகப் பிரிந்து தூர்வாரும் பணியை மேற்கொண்டனர்.
இதன் மூலம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரம் மழைநீர் ஆங்காங்கே தேங்காமல் சிவகங்கை தெப்பக்குளத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாய்க்கு வரும் வகையில் நீர்வரத்துக் கால்வாய் சீரமைக்கப்பட்டது. இதேபோன்று, சிறுவர் பூங்கா, மூலிகை பூங்கா மற்றும் காஞ்சிரங்கால் பகுதியிலிருந்து சிவகங்கை நகரில் உள்ள தெப்பக்குளம் வரை வரும் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டன.
இதனை இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தின் டிஐஜி ஆஸ்டின் ஈபன், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன், கமாண்டர் ஜஸ்டின் ராபர்ட் ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் வடிவேல், துணை கமாண்டர் முகமது சமீம், உதவி கமாண்டர் ரவி பிரகாஷ், சிவகங்கை வட்டாட்சியர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.