காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறை மற்றும் சமூகப்பணித் துறை ஆகியவற்றின் சார்பில் கருத்துப் பட்டறை வியாழக்கிழமை நடைபெற்றது.
முதியோர் பராமரிப்பு உண்மை அறிதலும் மற்றும் பொறுப்புகளும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்துப்பட்டறையின் தொடக்க விழாவுக்கு, பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஹா. குருமல்லேஷ் பிரபு தலைமை வகித்துப் பேசினார்.
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் முதன்மையர் கண்ணகி பாக்கியநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியது: மூத்த குடிமக்களுக்கு 2007 ஆம் ஆண்டு சட்டத்தின்படி முக்கிய அம்சங்கள் பல உள்ளன. முதியவர்களை பராமரிப்பவர்கள் அவர்களுக்கு உணவு, உறைவிடம், சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் கவனம் செலுத்தவேண்டும். குடும்பத்தில் ஒருவொருக்கொருவர் இடையிலான நல்ல உறவுமுறைகளே மூத்த குடிமக்களை பராமரிக்க உதவிசெய்யும். மூத்த குடிமக்கள் தொடர்பான அரசுத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை மாணவர் சமுதாயம் ஏற்படுத்துவது அவசியம் என்றார்.
கருத்துப்பட்டறையில், மூத்த குடிமக்கள், பராமரிப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர். முன்னதாக, பல்கலைக்கழகத்தின் கலைப்புல முதன்மையர் கே. மணிமேகலை வரவேற்றார். பேராசிரியர் கு.ரா. முருகன் நன்றி கூறினார்.