திருப்பத்தூர் ஒன்றியம், புதுவளவில் மின்னல் தாக்கியதில் மின்மாற்றி சேதமடைந்ததை அடுத்து, அதை சீரமைக்க கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரையூர் ஊராட்சி புதுவளவு கிராமத்தில் 2 வாரங்களுக்கு முன் மின்னல் தாக்கியதில் மின்மாற்றி சேதமடைந்து செயலிழந்தது. இதனால், மின் வாரியத் துறையினர் மாற்று ஏற்பாடாக காவனூரிலிருந்து மின் இணைப்பு வழங்கினர். அதில் குறைந்த மின் அழுத்தத்தில் மின்விநியோகம் கிடைப்பதால், அப்பகுதியினர் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
வழக்கம்போல், மின்னணு பொருள்களை பயன்படுத்த முடியவில்லை. மேல்நிலைத் தொட்டிக்கு நீரேற்ற முடியாததால், பக்கத்திலுள்ள கண்மாயில் தேங்கிய நீரை எடுத்து குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், தெருவிளக்குகளும் சரியாக எரிவதில்லை. இதனால், சேதமடைந்த மின்மாற்றியை விரைவாக சீரமைக்க கிராமமக்கள் வலியுறுத்துகின்றனர்.