நகரத்தார்களின் 9 கோயில்களில் ஒன்றான காரைக்குடி அருகேயுள்ள மாத்தூர் ஐநூற்றீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவத் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவத் திருவிழா, இந்தாண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அதையடுத்து, தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திரு வீதியுலா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு, சுவாமி-
அம்மன் தனித்தனி குதிரை வாகனத்தில் எழுந்தருளினர்.
திருவிழாவின் 9-ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டத்தையொட்டி, காலை 9 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். மாலையில் நகரத்தார்கள், பக்தர்கள் வடம்பிடித்து இழுக்கத் தேரோட்டம் நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை (பிப். 19) காலை 8 முதல் 9 மணி வரை தீர்த்தவாரி உற்சவமும், இரவு 7 முதல் 8 மணி வரை சப்தாவரணமும் நடைபெறுகிறது. புதன்கிழமை (பிப். 20) காலையில் உற்சவ சாந்தி நடைபெற்று, திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, மாத்தூர் கோயில் நகரத்தார்கள் செய்து வருகின்றனர்.