சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே காரையூர் கிராமத்தில் மனைவி இறந்த துக்கத்தில் கணவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
காரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதியான் மகன் காந்தி (40). அரசியல் பிரமுகரான இவர், திருக்காளப்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்னாள் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
இவருக்கும், பக்கத்து ஊரான மாங்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் லெட்சுமி (36) என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, லெட்சுமி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து கண்டவராயன்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மனைவி இறந்ததால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த காந்தி, திங்கள்கிழமை உயிரிழந்துவிட்டார். கணவன், மனைவி அடுத்தடுத்து இறந்ததால் அக்கிராமமே சோகத்தில் மூழ்கியது.