சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு மதுரையில் இருந்து பாத யாத்திரையாக பக்தர்கள் செவ்வாய்கிழமை வந்தடைந்தனர்.
உலக மக்கள் அனைவரும் அனைத்து செல்வங்களையும் பெற்று ஆனந்தத்துடன் வாழ வேண்டி ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் ஏராளமான பக்தர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு பாதயாத்திரையாக மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் உள்ள மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு வருவது வழக்கம்.
7 ஆவது ஆண்டாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இக் கோயில் நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள், மாதாஜி ஆகியோர் தலைமையில் ஏராளமான பக்தர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலிருந்து பாதயாத்திரை புறப்பட்டனர். வழியில் சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல், ராஜகம்பீரம் ஆகிய இடங்களில் பாதயாத்திரை குழுவினருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பின் பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு வந்தடைந்த பக்தர்கள் அங்கு நடந்த சிறப்பு பூஜையிலும் இரவு கோயிலில் நடந்த திருவிளக்குப் பூஜை வழிபாட்டிலும் பங்கேற்றனர்.