தனியார் மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்த இளைஞரின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் கொடுத்தப் புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை அருகே உள்ள பொன்னாளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் பாண்டியராஜன் (30). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் அண்மையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாததால் சிவகங்கை பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து பாண்டியராஜனுக்கு முதுகு தண்டுவடத்தில் செவ்வாய்க்கிழமை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாம். இந்நிலையில் புதன்கிழமை மூச்சுத் திணறல் காரணமாக இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையறிந்த அவரது உறவினர்கள் பாண்டியராஜன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிக் உடலை வாங்க மறுத்து தகராறில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு சென்ற சிவகங்கை நகர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி பாண்டியராஜனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.