சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசிமகத்தை முன்னிட்டு தெப்பத்தேர் உற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில் மாசிமக உற்சவ விழா கடந்த ஒருவாரத்துக்கு முன்பு தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் கோயிலில் மூலவருக்கும் உற்சவர் அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தெப்பத்தேர் உற்சவத்தை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அதன்பின் உற்சவர் அம்மன் அலங்காரத்துடன் சப்பரத்தேரில் எழுந்தருளி கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் வீதிகளில் அம்மனை வரவேற்று பூஜைகள் நடத்தினர். பின்னர் கோயிலுக்கு வந்தடைந்த அம்மன் அங்குள்ள தெப்பக்குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து தேர் தெப்பத்தைச் சுற்றி வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.