திருமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை தீ விபத்து மற்றும் சாலை விபத்தில் இரு சிறுமிகள் உயிரிழந்தனர்.
திருமங்கலத்தை அடுத்த பாரபத்தி கிராமத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி முத்து. இவரது மகள் வைரச்செல்வி (4). வெள்ளிக்கிழமை இரவு, சிறுமி வைரச்செல்வி கையில் தீப்பெட்டி வைத்து விளையாடிக் கொண்டிருந்தாராம்.
அப்போது, எதிர்பாராதவிதமாக வைரச்செல்வி மீது தீப்பற்றி எரிந்துள்ளது. உடலில் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி, சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை காலை உயிரிழந்தார். இது குறித்து கூடக்கோயில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திருமங்கலத்தை அடுத்த சிவரக்கோட்டையைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மகள் ஹரிணி (3). இச்சிறுமி, வெள்ளிக்கிழமை மாலையில் திருமங்கலம்-விருதுநகர் சாலையில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத கார் மோதியதில், சிறுமி ஹரிணி பலத்த காயமடைந்தார்.
உடனடியாக, அப்பகுதியில் இருந்தவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், ஹரிணி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கள்ளிக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து, விபத்துக்குக் காரணமான காரை தேடி வருகின்றனர்.